சென்னை செப், 7
சென்னை மெரினா கடற்கரையின்முக்கிய அடையாளமாக திகழும் காந்தி சிலை கடந்த 1959ம் ஆண்டு தேபி பிரசாத் ராய் சவுத்ரி என்பவரால் செதுக்கப்பட்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதலமைச்சர் காமராஜ் முன்னிலையில் 12 அடி வெண்கல காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் காந்தி நினைவு தினம் அன்று கவர்னர், முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காந்தி சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செதுத்துவார்கள். அத்துடன் தேசபக்தி பாடல் பாடுவது, ராட்டையில் நூல் நூற்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் கடற்கரை மெட்ரோ ரெயில் நிலையம் சுரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக தற்போது காந்தி சிலை அருகில் உள்ள இடங்கள் இரும்பு வேலி போடப்பட்டு ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின்போது காந்தி சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க தற்காலிகமாக காந்தி சிலையை பணி முடியும் வரை வேறு இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.