Spread the love

நெல்லை ஜூலை, 31

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23). சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. கடந்த 27-ம்தேதி நள்ளிரவு வீட்டு முன்பு நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

இந்த கொலை தொடர்பாக கோதைசேரியை சேர்ந்த முருகேசன், திசையன்விளையை சேர்ந்த விக்டர் ஆகிய 2 பேர் ராதாபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே சாமிதுரை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரணம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இன்றும் 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களிடம் வருவாய்த்துறை மற்றும் போலீசார் தரப்பில் இருந்து அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சாமிதுரை சகோதரி கலாவிற்கு அரசு வேலை வழங்க பரிந்துரை கடிதம் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு 3 சென்ட் இடம் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த 2 வாக்குறுதிகளையும் எழுத்து பூர்வமாக கொடுத்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வதாக சாமிதுரை உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இன்று உடலை வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்தி:

திரு. ஜான் பீட்டர்.

நெல்லை மாவட்ட செய்தியாளர்.

#Vanakambharatham#nellai#news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *