சென்னை ஆக, 27
பிரபல நடிகர் விஷால் ‘விஷால் பிலிம் பேக்டரி’ என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை அவருக்காக லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது.
இதையொட்டி நடிகர் விஷாலும், லைக்கா நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும்வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமை களும் லைக்கா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஷால் தங்களுக்கு வழங்கவேண்டிய ரூ.21.29 கோடியை வழங்காமல் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிட உள்ளதாகவும், சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமையை விற்க உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ரூ.15 கோடியை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி யில் 3 வாரங்களில் நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும் என்று நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அவர் பணத்தை செலுத்தாததால், அவரை நேரில் வரவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. உயர் நீதிமன்றத்தை நேரில் சந்தித்த விஷால் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்ததால் தனக்கு 18 கோடி நஷ்டம் ஆனதாக தெரிவித்திருந்தார். விஷால் தரப்பு தெரிவித்த இந்த கருத்துக்களை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம் விஷால் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் இந்த வழக்கிற்கு தீர்வு காண அவரது சொத்து விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.மீண்டும் செப்டம்பர் 9ம் தேதி வழக்கு விசாரணை செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார்.