சென்னை ஆகஸ்ட், 15
சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியில்,பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற செய்தி எப்படி வெளிவந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. பொதுவாக தனியார் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே நேரடியாக பனிரெண்டாம் வகுப்பு பாடத்தை நடத்துகின்றன. அதில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைத்து, தங்கள் பள்ளிதான் சிறந்தது என்பதை காட்ட வேண்டும் என்று அவர்கள் சென்று விடுகிறார்கள்.
இவ்வாறு செய்தால் போட்டித் தேர்வுகளின் போது மாணவ-மாணவிகள் சிரமப்படுவார்கள். அதனை கருத்தில்கொண்டுதான் பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரையில் அதனை ரத்து செய்வது தொடர்பான எண்ணம் எதுவும் இல்லை. மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை. வழக்கமான நடைமுறையின்படியே பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.