தூத்துக்குடி ஆகஸ்ட், 13
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து கல்லூரியில் மாணவ மாணவியருக்கு பனைமரங்கள் குறித்தும் பனைபொருட்களின் பயன்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இந்த கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் பூங்கொடி தலைமை தாங்கினார். காமராஜ் கல்லூரி முன்னாள் முதல்வர் நாகராஜன், பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் ஜேசுதாசன் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தாவரவியல் துறை பேராசிரியர் குமரேசுவரி வரவேற்று பேசினார். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு பொதுச்செயலாளர் தனலெட்சுமி கருத்து தெரிவித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் கலந்து கொண்டு 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 ஆயிரம் பனை விதை நடவுத் திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பனைமர விதைகளும் நடவு செய்யப்பட்டன.