மதுரை ஆகஸ்ட், 6
பேரையூர் அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டும், குழியுமான சாலை பேரையூர் அருகே உள்ளது பி.ஆண்டிபட்டி.
இந்த கிராமத்தில் சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். பேரையூர் பெரிய கண்மாய் அருகில் உள்ள இந்த கிராமத்துக்கு டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில் கண்மாய் மேல் அமைத்துள்ள சாலையில்தான் செல்லவேண்டும். இந்த சாலை அமைத்து நான்கு வருடங்கள் ஆகிறது. தற்போது சாலை குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மேலும் இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பைபர் கேபிள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட மண், சாலையில் கொட்டப்பட்டதால் மழைக்கு சாலை சேறும், சகதியுமாக மாறி விட்டது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதியடைந்தனர்.
இதுகுறித்து டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர். இந்நிலையில் காலை கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் பேரையூர், டி.கல்லுப்பட்டி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல் துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in