துபாய் நவ, 7
ஐக்கிய அரபு அமீரகம் – சர்வதேச ஷார்ஜா 41வது புத்தகக் கண்காட்சியில் கடந்த 5ம் தேதி (சனிக்கிழமை) அன்று தமிழ்நாடு ஈரோட்டை சேர்ந்த துபாயில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் முனைவர் ஸ்ரீ ரோகிணி எழுதிய ஐந்தாவது புத்தகம் “ஈர்ப்பு விதி 2” என்ற புத்தகத்தை புக்டோப்டியா(Booktopia) நிறுவனர் மலர்விழி வெளியீடு செய்தார்.
இதில் அவரது மகள் ரிதனி காதம்பரி எழுதிய கவிதை சிந்தும் இடக்கை (RK’s னLEFT PEN RIGHT THOUGHTS) புத்தகத்தை அவரது பாட்டி ரேவதி பெருமிதத்துடன் வெளியிட்டார். இதனை பிரபல குழந்தைகள் மருத்துவர் ராஜேஷ் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இந்தப் புத்தகம் தனது சொந்த ஓவியங்களுடன் தனது சொந்த கையெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியும்,பாடல் இயற்றியும், மலையாளம் மற்றும் அரபிக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
“இருமொழி புத்தகத்தை வெளியிட்ட உலகின் மிக இளம் வயது எழுத்தாளர் ” என்ற பட்டத்தை அமீரக உலகச் சாதனைப் புத்தகத்தின் தலைவர் டாக்டர் ஜித்தேந்தரா அவர்கள், குழந்தை எழுத்தாளருக்கு உலகச் சாதனை புத்தகச் சான்றிதழ் கொடுத்து கெளரவித்தார்.
மேலும் சார்ஜா அரங்கில் அனைவரின் ஆசீர்வாதமாய் ஒன்று சேர கரவொலி எழுப்பி எழுந்து நின்று குழந்தை எழுத்தாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வினைப் பற்றி முனைவர் ஸ்ரீ ரோகிணி கூறும்போது,
“இது இறைவன் அருள், ஒரே மேடையில் மூன்று தலைமுறைகளாக தனது அம்மா புத்தக வெளியீடு செய்யும் காட்சி மகிழ்ச்சியும், பூரிப்பும் சொல்லில் அடங்காது என்றும் மேலும் தன்னை பெற்றவளும், தான் பெற்றவளும் ஒரே மேடையில் காண இரண்டு கண் போதாது. எத்தனை நாள் ஆசை,கனவு, திட்டமிடல், புத்தக வெளியீடு செய்வது, “திறம்படச் செய் அதற்கு பஞ்சபூதங்களும்,வெற்றியும் உன் வசம்” என்று தன் தாத்தா கூறியது இந்த தருணத்தில் சாத்தியப்படுகிறது. உங்கள் கனவுகளை நோக்கி ஓடுங்கள், பக்கபலமாய் நான் இருக்கிறேன் என்று எங்களை மேடையில் ஏற்றி ரசிக்கும் என் பிரியமான கணவர் தியாகு அவர்களுக்கு நன்றி என கூறி உள்ளம் நெகிழ்ந்தார்.
சாதி,மதம்,இனம்,மொழி பார்க்காமல் எனது சக குழந்தைகள், சமூகம் மற்றும் எனது சமூகத்தைப் பற்றி நான் எழுதுகிறேன்.இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், ஊக்கப்படுத்தவும், உதவவும் விரும்புகிறேன். எல்லோருக்கும் நன்றி என்று இளம் எழுத்தாளர் ரிதனி காதம்பரி தெரிவித்தார்.
இப்புத்தக வெளியீட்டு விழாவில் அமீரகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள், உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு குழந்தை எழுத்தாளர் ரிதனி காதம்பரிக்கும், அவரது தாயார் முனைவர் ஸ்ரீ ரோகிணிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.அமீரக செய்திப் பிரிவு.