பெரம்பலூர் நவ, 3
பெரம்பலூர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வரும் 5-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூர் முக்கிய அலுவலகங்களில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டிஸ் ஒட்டப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தொடங்கிய பேரணியை ஊழல் தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பாலக்கரையில் துவங்கி பேரணி முக்கிய வீதி வழியாக சென்று புது பேருந்து ஸ்டாண்டில் முடிவடைந்தது. செல்லும் வழியில் பொதுமக்களிடம் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் ஆய்வாளர்கள் ராமேஸ்வரி, விஜயலெட்சுமி, காவல் துறையினர் மற்றும் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.