ராமேசுவரம் அக், 21
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கனமழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழையாக கொட்டியது.
இதனால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் ஓடியது. பல்வேறு கட்டிடங்களை மழைநீர் சூழ்ந்து நின்றது. ராமநாதசுவாமி கோவிலின் சாமி சன்னதி பிரகாரத்தில் மழைநீர் புகுந்து தேங்கியது. இதனால் கோவிலுக்கு நேற்று காலை வந்த பக்தர்கள் பிரகாரத்தில் தேங்கிய மழை நீரில் நடந்து சென்று தரிசனம் செய்தனர். தண்ணீரை மோட்டார் வைத்தும், தூய்மை பணியாளர்கள் மூலமும் வெளியேற்றும் பணியில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.