கோயம்புத்தூர் செப், 28
மேட்டுப்பாளையத்தில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ஹரீஷ். இந்து முன்னணி இளைஞர் அணியின் நகரப் பொறுப்பாளராக உள்ளார். இவரது வீடு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் முன்பக்க கண்ணாடி நேற்று உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் ஜன்னல் கண்ணாடியும் உடைந்து கிடந்தது. மர்மநபர்கள் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
மேலும் தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பாலாஜி உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு திரண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இன்று மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில்
இந்து முன்னணியை சேர்ந்த ஹரீஷ் என்பவரின் கார் தாக்கப்பட்ட வழக்கு சம்மந்தமாக, அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி தமிழ்ச்செல்வன் (24), அவரது நண்பர் ஹரிஹரன் (25) ஆகிய இருவரை கைது செய்துள்ளோம்.
மேலும் விநாயகர் சதுர்த்தியின் போது முன் விரோதம் ஏற்பட்டதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான காரணம் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுழற்சி முறையில் இரவு பகலாக மாவட்டம் முழுவதும் 1500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.