கீழக்கரை ஆக, 27
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவையில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.
மனிதநேயத்திற்கான இந்த விசாவை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கியது. இதனைப் பெற்ற ஹமீது யாசின் கடந்த வாரம் கீழக்கரை வந்தார்.
இதனைத் தொடர்ந்து, கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மற்றும் கீழக்கரை மாணவரணி அமைப்பாளர் இப்திகார், 9வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் நசுருதீன், ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
மேலும் கீழக்கரை திமுக இளைஞரணி அமைப்பாளர்- நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஏற்பாட்டில் வரவேற்பளிக்கப்பட்டு, பல்வேறு பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் கூறுகையில்,
அமீரகத்தில் அரசின் அங்கீகாரம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கும் ஈமான் அமைப்பு தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லா கான் ஆலோசனைையின் பேரில், அனைத்து சமுதாய மக்களுக்கும் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருவதாகவும், அமீரகத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போகும் தமிழ் தொழிலாளர்களின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருக்கு உதவியாக உள்ளோம் என்பதையும் தெரிவித்தார்.