மார்ச், 12
இஸ்லாமிய மக்களின் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்ட நிலையில், இந்த சீசனில் தமிழகம் முழுவதிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்துக்கு கஞ்சி தயார் செய்யப்படும். ’நோன்புக் கஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்த கஞ்சியை பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்கள் உட்கொள்வதோடு, பொதுமக்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழ்வர்.
இந்த ’நோன்புக் கஞ்சி’ நமது உடலின் செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும், நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து வாடிப் போய் இருக்கும் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 150 கிராம்
சிறும்பருப்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
பிரியாணி இலை – 1
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
தேங்காய் பால் – 1 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் சீரகம் மற்றும் வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 750 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அரிசியைப் போட்டு பிறகு பருப்பையும் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, புதினா, பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு, தீயை குறைவில் வைத்து, குக்கரை மூடி 10-15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி, நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, மசித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கி, தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றினால், சுவையான நோன்பு கஞ்சி ரெடி!
குறிப்பு: அசைவ விரும்பிகளாக இருந்தால் அசைவம் சேர்த்து கொள்ளலாம்.