சின்னசேலம் நவ, 26
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை17 ம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்கள் காவல் துறையினரின் பேருந்து மற்றும் பள்ளி பேருந்து உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தி தீ வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளின் ஆதாரத்தை கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னசேலம் அருகே ஏரவார் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ், வேல்முருகன் ஆகியோர் கலவரத்தின் போது காவல் துறையினரின் வாகனத்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. அதேபோல் கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த அவிஷ் ஸ்ரீ முகந்த் (20) பள்ளியில் இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளை அடித்து நொறுக்கியதும் தெரியவந்தது.
இதனை அடுத்து இவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.